ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எந்த விதமான ஆப்ஸ்கள் டவுன்லோட் செய்தாலும்,
அந்த ஆப்ஸ்-களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள் கேலரி, எஸ்.எம்.எஸ்
மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளை அணுகுவதற்கான அனுமதியை ஆப்ஸ்கள் கேட்டு
வந்தன. இனி அந்த அணுகலை நீங்கள் வழங்க வேண்டாம், அதற்கான தீர்வை கூகிள்
தற்பொழுது செய்துள்ளது.
இனி அந்த பயம் தேவையில்லை
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் உங்கள்
கேலரி, எஸ்.எம்.எஸ் மற்றும் கால்ஸ் போன்ற சேவைகளின் தரவை அணுக, அந்த
பயன்பாடுகள் அனுமதியை கேட்கும். இது பாதுகாப்பானது இல்லை என்று
கருதப்பட்டது. இதை உணர்ந்த கூகிள் இப்போது உங்கள் அழைப்பு மற்றும்
எஸ்எம்எஸ் தரவைக் கேட்கும் பயன்பாடுகளின் எண்ணிக்கையைப் பெருமளவு
குறைத்துள்ளது.
கூகிள் நிறுவனத்தின் புதிய கொள்கை என்ன செய்தது?
உண்மையில், கூகிள் நிறுவனம் ஸ்மார்ட்போனின் தரவை பாதுகாக்க மற்றும்
தேவையற்ற அணுகலை தடைசெய்ய 2018ம் ஆண்டு கொள்கை ஒன்றைச் செயல்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் அழைப்பு பதிவு மற்றும் எஸ்எம்எஸ் தரவை
அணுகும் பிளே ஸ்டோர் பயன்பாடுகளின் எண்ணிக்கை 98 சதவீதம் குறைந்துள்ளதாகக்
கூகிள் அறிவித்துள்ளது.
மிச்சம் உள்ள 2% பயன்பாடுகளுக்கு என்ன ஆனது?
டெவலப்பர்கள் தங்கள் பயன்பாடுகளைப் புதுப்பிக்கவும், பயனர்களைப்
பாதுகாக்கவும் கூகிள் உடன் கூட்டுசேர்ந்ததால், எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு
பதிவு தரவை அணுகும் பயன்பாடுகளில் 98% குறைவு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 2%
பயன்பாடுகள், அவற்றின் முக்கிய செயல்பாட்டைச் செய்ய எஸ்எம்எஸ் மற்றும்
அழைப்பு பதிவு தரவு தேவைப்படும் என்பதால் மட்டும் அணுக்களுக்கான
அனுமதியுடன் செயல்படுகிறது.
கூகிள் பிளே ஆண்ட்ராய்டு பயன்பாட்டு பாதுகாப்பு
கூகிள், சுமார் 790,000 க்கும் மேற்பட்ட கொள்கை மீறும் மோசமான மற்றும்
தீங்கிழைக்கும் பயன்பாடுகளைத் தனது அதிகாரப்பூர்வ இடுகையிலிருந்து நீக்கம்
செய்துள்ளது. அவற்றை பிளே ஸ்டோரில் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் பல
முயற்சிகளை கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தியுள்ளது என்று கூகிள் பிளே பிளஸ்
ஆண்ட்ராய்டு பயன்பாட்டு பாதுகாப்பின் தயாரிப்பு மேலாளர் ஆண்ட்ரூ அஹ்ன்
கூறியுள்ளார்.
100 பில்லியினுக்கும் அதிகமான பயன்பாடுகளை ஸ்கேன்
ஆண்ட்ராய்டு தீம்பொருள் பாதுகாப்பு அம்சமான கூகிள் பிளே ப்ரொடெக்ட்
அம்சத்தைப் பற்றியும் நிறுவனம் சில தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாகக்
கூகிள் பிளே ப்ரொடெக்ட் ஒவ்வொரு நாளும் 100 பில்லியினுக்கும் அதிகமான
பயன்பாடுகளை ஸ்கேன் செய்கிறது மற்றும் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால்
செய்யப்பட்ட எந்தவொரு பயன்பாடுகளிலும் ஏதேனும் பாதுகாப்பு சிக்கல்களைக்
கண்டறிந்தால் பயனர்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்புகிறது.
எச்சரிக்கை தகவல்
கூகிள் பிளே அல்லாத சர்வர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது
வெளிவந்த சுமார் 1.9 பில்லியினுக்கும் அதிகமான தீம்பொருள் பயன்பாடுகளில்
நிறுவல்களை, இது உங்கள் ஸ்மார்ட்போனிற்கு தீங்கு விளைவிக்கும் என்ற
நோட்டிபிகேஷன் மெசேஜ்ஜையும் பிளே ப்ரொடெக்ட் சூட் தனது பயனர்களுக்கு
அனுப்பி அவர்களுக்கான எச்சரிக்கை தகவலையும் அனுப்பியுள்ளது என்று கூகிள்
தெரிவித்துள்ளது.
இன்னும் அதிகம் முதலீடு செய்யும் கூகிள் நிறுவனம்
அதேபோல் கூகிள் இந்த ஆண்டு, மூன்று முக்கிய பாதுகாப்பு பகுதிகளில்
பெருமளவில் முதலீடு செய்யும் என்று அறிவித்துள்ளது. பயனர் தனியுரிமையைப்
பாதுகாக்கப் பயன்பாட்டு பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்துதல், மோசமான
செயலிகளை விரைவாகக் கண்டறிதல் மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகளைத்
தடுப்பது மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் போன்ற காரியங்களில்
வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று கூகிள் அறிவித்துள்ளது.
Tags:
Apps